வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் வடிவேலு. ‘வின்னர்’, ‘சந்திரமுகி’, ‘பிரண்ட்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் தனது தனித்துவமான உடல் மொழி மற்றும் நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்கிய வடிவேலு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவான கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘கேங்கர்ஸ்’ படம், வடிவேலுவின் முந்தைய பாணியை பின்பற்றி, பழைய டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட ஒரு காமெடி படமாக அமைந்துள்ளது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு ‘பொம்பளை கெட்டப் போட்டு’ வரும் பகுதி மட்டுமே சிறிது சிரிப்பை வரவழைக்கிறது. மற்றபடி, படத்தின் கதை, வசனங்கள், மற்றும் வடிவேலுவின் நகைச்சுவை ஆகியவை பழைய பாணியில் இருப்பதால் புதுமையாக இல்லை என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
கம்பேக் பயணம்?
வடிவேலுவின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் ‘கம்பேக்’ என்ற பேச்சு எழுவது வழக்கம். ‘நாய் சேகர்’ படத்தின் போதும் இதே பேச்சு எழுந்தது. ஆனால், ‘கேங்கர்ஸ்’ படமும் அவருக்கு முழுமையான கம்பேக் வெற்றியை தரவில்லை. வடிவேலுவின் ஆரம்ப கால படங்களில் அவரது உடல் மொழியும், இயல்பான நகைச்சுவையும் ரசிகர்களை கவர்ந்தன. ‘வின்னர்’ படத்தில் ‘நானும் ரவுடிதான்’ என்ற காட்சி, ‘தலைநகரம்’ படத்தில் அவரது காமெடி என பல காட்சிகள் இன்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸாக வலம் வருகின்றன. ஆனால், சமீப காலத்தில் அவரது காமெடி பழைய பாணியில் இருப்பதால், இன்றைய இளம் ரசிகர்களை கவர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
வடிவேலுவின் சரிவுக்கு காரணம்?
வடிவேலுவின் சரிவு 2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அவர் விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததில் இருந்து தொடங்கியதாக பலர் கருதுகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கியது. மேலும், அவரது ஆரம்ப காலத்தில் இல்லாத ‘ஆட்டிடியூட்’ பிரச்சனைகள் பின்னர் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீ போதை பழக்கத்திற்கு அடிமையா? பிரபலம் சொன்ன தகவல்கள்..
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதற்கு வடிவேலுவின் கோரிக்கைகளும், செட் மாற்றம் போன்ற பிரச்சனைகளுமே காரணம் என்று கூறப்படுகிறது. இது தயாரிப்பாளர்களிடையே அவருக்கு எதிரான கருத்தை உருவாக்கியது. மேலும், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் தலைப்பு தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதல், அவரது ‘ஈகோ’ பிரச்சனைகளை மேலும் வெளிப்படுத்தியது.
வடிவேலு தனது குழுவில் இருந்த பிற காமெடி நடிகர்களை போண்டாமணி, சிங்கமுத்து உள்ளிட்டோர் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர்கள் கஷ்டமான காலகட்டத்தில் இருந்தபோது, வடிவேலு உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாக, விவேக் போன்ற நடிகர்கள் தங்கள் குழுவினருக்கு உதவியதற்கு உதாரணங்கள் உள்ளன என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.